tamilnadu

img

150 கி.மீ நடந்தே சொந்த ஊருக்கு வந்த சிறுமி பலியான சோகம்

பிஜப்பூர்:
தெலுங்கானாவிலிருந்து சத்தீஸ்கரில் உள்ள தனது சொந்த ஊருக்கு 150 கி.மீ நடந்தே சென்ற 12 வயது சிறுமி சுருண்டு விழுந்து பலியானார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்யாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளன. இதனால், வெளிமாநிலங்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் கன்னிகுடா கிராமத்தில் மிளகாய் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த அம்லோ மக்தம் என்ற 12 வயது சிறுமி உள்ளிட்ட ஒரு குழுவினர் ஏப்.15-ஆம் சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்திற்கு நடந்தே புறப்பட்டனர். திங்கள்கிழமை பிஜப்பூர் மாவட்டம் பண்டர்பால் கிராமத்தை குழுவினர் வந்தடைந்தனர். காலையில் உணவருந்திய அம்லோ மக்தம் வயிறு வலிப்பதாகக் கூறி சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பண்டர்பால் கிராமத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் சிறுமியின் வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தச் சிறுமியை பரிசோதித்த பிஜப்பூர் மாவட்ட மருத்துவ அதிகாரி பி.ஆர்.புஜாரி, "சிறுமிக்கு கடுமையான நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இருந்துள்ளது. அவர் நன்றாக சாப்பிடவில்லை. அதே நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது" என்றார்.
இறந்து போன சிறுமிக்கு சத்தீஸ்கர் மாநில அரசு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.
 

;